அயோத்தி: அயோத்தியில் 18 லட்சம் விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தீப உற்சவத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் ராம ஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் வழிபாடு நடத்தினார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகைையொட்டி, 18 லட்சம் அகல்விளக்குகளுடன் பிரமாண்ட தீப உற்சவ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் முறையாக தீப உற்சவத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக நேற்று அயோத்தி சென்றார். அவரை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர், பிரதமர் மோடி அயோத்தியில் ராமஜென்ம பூமியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு சென்று ராம் லல்லா விக்கிரகத்தை தரிசனம் செய்தார்.
2020-ம் ஆண்டு ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடந்தபோது பிரதமர் மோடி வந்தார். அதன்பிறகு தற்போதுதான் ராமர் கோயிலுக்கு வந்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ராமர் கோயில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இப்பணியை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். பின்னர், ராம் கதா பூங்காவில் ராமரின் முடிசூட்டு விழாவிலும் கலந்து கொண்டார். அப்போது அங்கு மோடி பேசுகையில், ‘‘ராமரின் லட்சியங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க விரும்பும் மக்களுக்கு ஒளி விளக்கு.
மிகக் கடினமான இலக்குகளை அடைவதற்கான தைரியத்தை வழங்கும். அனைவருக்கும் வளர்ச்சிக்கு என்பது ராமரின் உத்வேகம். பிரக்யாராஜில் 51 அடியில் ராமர் சிலை அமைக்கப்படும்’’ என்றார். பின்னர், பிரமாண்ட தீப உற்சவத்தை அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சரயு நதிக்கரையில் நடந்த ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.